சாலையில் கிடந்த ஏகே 47 தோட்டாக்கள் - காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு!
சென்னை மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே-47 ரக துப்பாக்கியின் குண்டுகள் சாலையில் கிடந்தன. அந்த குண்டுகளை தாம்பரத்தை சேர்ந்த சிவராஜ் என்ற இளைஞர் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அவர் உடனே தகவல்
தெரிவித்தார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், அந்த குண்டுகள் சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு சொந்தமானது என கண்டறிந்தனர்.
பூந்தமல்லி CRPF கம்பெனியில் இருந்து, ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் செல்லும் போது ஏகே 47 மேகஸின் மற்றும் 30 தோட்டாக்கள் வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே ராஜ்பவனில் பணிபுரியும் CRPF வீரர் அன்னப்பு லட்சுமிரெட்டி, 2 மெகஸின் மற்றும் 30 தோட்டாக்கள் காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து R-11 ராமாபுரம் காவல் நிலையத்திற்கு CRPF வீரரை அழைத்து விசாரித்ததில், பூந்தமல்லி CRPF கம்பெனியில் இருந்து ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்காக செல்லும்போது தவறவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து CRPF வீரர் ஆவணங்களை காவல்நிலையத்தில் சமர்பித்த நிலையில், போலீசார் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். பின்னர் பொறுப்புடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இளைஞர் சிவராஜை பாராட்டினர்.