குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமார்... எப்போ தெரியுமா?
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜன.25ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் டெல்லியில், இம்மாத இறுதியில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.