இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல் - சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் நேற்று இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
இதன்படி, லண்டன் - மும்பை விமானம், ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கும், நியூயார்க் - டெல்லி விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கும், நியூயார்க் - மும்பை விமானம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கும் திருப்பி விடப்பட்டன.
இதேபோல் லண்டன் - டெல்லி விமானம், மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுதவிர மும்பை - லண்டன் மற்றும் மும்பை - நியூயார்க் சென்ற விமானங்கள் மீண்டும் மும்பைக்கே திரும்பிவந்தன. டெல்லி - வாஷிங்டன் விமானம் டெல்லிக்கு திரும்பியது. நியூ ஹார்க் - டில்லி விமானம், வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது. நீண்ட துாரம் செல்லும், 'ஏர் இந்தியா'வின், 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, 'இண்டிகோ' நிறுவனமும் நீண்ட துாரம் செல்லும் சில விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.