மக்களவைத் தேர்தல் 2024 | ’அதிமுக உரிமை மீட்புக் குழு' - இன்று விருப்ப மனு பெறுதல் மற்றும் நேர்காணல்...
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளிடம் இருந்து இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் பிசியாக இருக்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வமும் அழைப்பை விடுத்திருக்கிறார்.
அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிட விரும்புவோர் இன்று (மார்ச் 10) நேர்காணலில் கலந்து கொள்ள அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த கட்சியையும் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ்ஸையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கினார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் மேற்கொண்ட சட்டப்போராட்டங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக முடிந்தன. கடைசியில், அதிமுக கொடியையும், வேட்டியையும் கூட பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸ்ஸுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலைமை சென்றுவிட்டது.
இதனால் ஓபிஎஸ்ஸும், அவருடன் ஒட்டியுள்ள கொஞ்சம் நஞ்சம் ஆதரவாளர்களும் சேர்ந்து 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இயக்கத்தின் லெட்டர் பேடில் ஓர் அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டிருக்கிறார். அதில், "2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இருக்கும் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கழ ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நேர்காணல் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இந்த நேர்காணலில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் குப கிருஷ்ணன், கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் பி.எச். மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்கலை குறிப்பிட்டு அவர்களும் நேர்காணலில் கலந்து கொள்வார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், “மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளிடம் இருந்து இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கையால் அவர் தனியாகவோ அல்லது வேறு ஏதாவது கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோ, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.