For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

06:49 PM Jan 09, 2024 IST | Web Editor
அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Advertisement

போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அதிமுக தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட
செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்
கூட்டணி குறித்து அதிமுக தலைமை உரிய முடிவு எடுக்கும் எனவும் நிர்வாகிகள்
தங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் பணியாற்றி, வேட்பாளர்கள் குறித்த
பரிந்துரையை தலைமைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"22-ம் தேதி தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் வேறு வேறு கதவு இலக்க எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. அதிமுகவை
குறி வைத்து அதிமுக வாக்குகளை திமுக நீக்கப் பார்க்கிறது. எனவே அதிமுகவினர்
கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள் : தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!

எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டத்தை மக்களுக்கு பயன் தரும் வகையில் நடத்துவது
குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளை கூறும் வகையில் எம்ஜிஆர்
பிறந்தநாள் கூட்டம் நடைபெறும். மேலும் விலைவாசி உயர்வு உட்பட தற்போதைய
ஆட்சியின் அவலங்களை எடுத்து கூற உள்ளோம். அனைத்து தரப்பினரும்
போராட்டத்திலேயே இருக்கின்றனர். தமிழ்நாடே போராட்ட களமாகிவிட்டது. சட்டம்
ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக காரணம் என சொல்வது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போய் என்பது போல் உள்ளது. முதலமைச்சர் தனது அப்பாவுக்கு சிலை வைக்க, பெயர் வைக்க, கார் ரேஸ் நடத்த கருவூலத்தில் பணம் இருக்கிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உள்ளது. அவர்களது கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்தால் தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னையையும் தீர்த்து விடலாம்.

அதிமுக ஆட்சி இருந்திருந்தால் அரசின் கருவூலத்திலிருந்து போக்குவரத்துத் கழகங்களுக்கு பணம் கொடுத்திருப்போம். 70 கோடி தான் கேட்கின்றார்கள். பிடிவாதப் போக்கை அரசு கைவிட வேண்டும். மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்குமா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வடிவமைப்பையே மாற்றி விட்டார்கள். எல்லா
இடத்திலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையும், அவரது பெயரும் வைக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. 3 அமைச்சர்கள் ஷிப்ட் போட்டு வேலை செய்தும் அந்த பேருந்து நிலையம் இப்படி இருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, முன்கூட்டியே சொல்லிவிட்டு திறந்திருக்க வேண்டும்.

கருணாநிதியால் உயர்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் என்பதை தமிழ்நாடு ஏற்காது. உண்மைக்கு புறம்பாக நடிகர்கள் ரஜினி, கமல் பேசுவதை ஏற்க முடியாது. ஸ்கிரிப்ட் கொடுத்து பேச சொல்வார்கள் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விஜய்யும், அஜித்தும் தப்பிவிட்டனர்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags :
Advertisement