"இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்" - ஜெயக்குமார் பதிலடி!
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குரலாகத் தான் இருக்கும்! இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுக தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"! தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!
இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவர்கள் தான் என்பதை உணர வேண்டும்!
கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்"
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.