அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு!
கோவை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன். இவர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடன் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனில் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நிறைவடைந்த பிறகு அவரின் வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.