காரில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
காரில் சென்றவாறு யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு, வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சிலர் கட்டுப்பாடுகளை மீறி நள்ளிரவில் வனப்பகுதிக்குள் வலம் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மிதுன் என்பவர், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து, தனது வாகனத்தின் உயர் ஒளிவிளக்குகளை ஒளிரச் செய்து, யானைக்கு மிக அருகில் வாகனத்தை இயக்கி யானை விரட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில், பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.