Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அதிமுக மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து கொண்டிருக்கிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அதிமுக மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:38 PM Feb 08, 2025 IST | Web Editor
Advertisement

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமாருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, கழகத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும், தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் திமுக-வின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி! தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.

2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் திமுக கூட்டணியானது தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை அடைவதும் தொடர்கதையாக அமைந்தது.

எனவே தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது, அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அதிமுக இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பொருத்தவரையில் மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் முன் வைத்தோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட முறையில் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அனைவரும் நேரடியாக உணர்ந்துள்ளார்கள். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது.

மகத்தான திட்டங்களைத் தரும் திமுக அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள். தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  சந்திரகுமாரை, வெற்றி வேட்பாளராக ஆக்கி சட்டமன்றத்துக்குள் அழைத்து வர உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் சு. முத்துசாமிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார்.

எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம்! ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன் "

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKDMKEPSErodeEastByelectionMK StalinVCChandhirakumar
Advertisement
Next Article