'மா' விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரத போராட்டம்!
மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மாம்பழ விவசாயிகளின் வேதனையை ‘வீணாகும் மாம்பழங்கள்.., வேதனையில் விவசாயிகள்’ எனும் தலைப்பில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாக வெளியிட்டது. இதனையடுத்து, நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவித்தது.
இதையும் படியுங்கள் : Gold Rate Today | தங்கம் விலை குறைவு… இன்றைய விலை நிலவரம் என்ன?
அந்த வகையில், கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அவர்கள், 'மா’ விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் மா விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பச்சை நிற துண்டை அணிந்தவாறு உள்ளனர்.