அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் - எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
முன்னாள் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் பல்வேறு உட்கட்சி போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பொதுசெயலாளர் தேர்வை எதிர்த்தும், பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார்.
வழக்கு விசாரணையின் போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, மனுதாரை சூர்ய மூர்த்தி 2018ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டார் என வாதிட்டது.
சூர்ய மூர்த்தி தரப்பானது, கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி யின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த நிலையில் , இந்த வழக்கில்த நீதிபதி பாலாஜி இன்று தீர்ப்பளித்துள்ளார். அதில் சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.