அகமதாபாத் விமான விபத்து - மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவர் உயிரிழந்த சோகம்... லண்டனில் தவிக்கும் 2 குழந்தைகள்!
இந்தியாவில் நடந்த மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்று நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து. இந்த விபத்தில் மொத்தம் 265 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. போயிங் 787-8 ரகத்தை சேர்ந்த இந்த விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதில், அந்த விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவர்கள் சிலரும் இறந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானத்தில் பயணம் மேற்கொண்ட 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இதில் மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு, லண்டன் திரும்பிய அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியான 36 வயதான அர்ஜுன் மனுபாய் படோலியா லண்டனில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பாரதிபென் ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன் தனது அஸ்தியை தாய் நாட்டில் கரைக்க வேண்டும் என கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற கணவர் தனது மனைவியின் அஸ்தியை கரைப்பதற்காக, குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தனது மூதாதையர் கிராமமான வாடியாவுக்குத் வந்துள்ளார். அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு, நேற்று லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார்.
இச்சூழலில் யாரும் எதிர்பாராத அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. அர்ஜுனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் உள்ளனர். மகள்களுக்காக வீடு திரும்ப இருந்த தந்தை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்தது பெரும் துக்கத்தை அளித்துள்ளது.