For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எம்ஜிஆருக்குப் பின் பெண் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த விஜயகாந்த்!

02:22 PM Dec 28, 2023 IST | Web Editor
எம்ஜிஆருக்குப் பின் பெண் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த விஜயகாந்த்
Advertisement

தமிழ் திரையுலகில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். அவருக்குப் பிறகு அதே அளவிலான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் என்னும் பெருமையை பெற்றவர் விஜயகாந்த்! இது குறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்..

Advertisement

புரட்சிக் கலைஞர்,  கேப்டன் என்னும் பட்டங்களுக்கு மத்தியில் 80களின் காலக்கட்டத்தில் 'விசயகாந்த்'  என பெண்களால் அழைக்கப்பட்டு,  தனக்கென தனி பெண் ரசிகைகள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜயகாந்த்.  எம்.ஜி.ஆர்-க்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டது அவரை தான்!

அந்த காலக்கட்டங்களில் கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற இரு பிரிவுகள் உருவாகி, அவர்களின் படங்கள் பெரிதளவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.  இதற்கு நடுவே பெண்கள் தங்களுக்கான கதாநாயகனை விஜயகாந்தின் நடிப்பில் கண்டுக்கொண்டனர். அலட்டல் இல்லாத தோரணையும்,  இயல்பான நடிப்பும்,  கண்கள் சிவக்க வெளிப்பட்ட உணர்ச்சிகளுமே அதற்க காரணமாய் அமைந்தது.

ஆக்‌ஷன் படங்களில் விஜயகாந்த் பட்டையை கிளப்பிய போதிலும்,  'வைதேகி காத்திருந்தாள்',  'நானே ராஜா நானே மந்திரி',  'அம்மன் கோயில் கிழக்காலே' போன்ற படங்கள் பெண் ரசிகைகளை அவர் பக்கம் இழுப்பதற்கு பெரும் பங்காற்றின.  அதிலும் 1984ம் ஆண்டு விஜயகாந்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.  அந்த ஆண்டில் அவர் நடித்த 18 படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்தன.

ஆக்‌ஷன்,  காமெடி,  குடும்பம் என பல்வேறு வெரைட்டிகளில் கதகளி ஆடியவர், தமிழ்நாட்டு மக்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார்.  அவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன்,  புலன் விசாரணை,  மாநகரக் காவல் போன்றவை பெண்களை ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்து பார்க்க வைத்தது.  சின்ன கவுண்டர் படத்தின் மூலம் பல தாய்மார்களின் மகனாகவும் பிறப்பெடுத்தார்.

கிராமத்து நாயகனாகவும் சரி,  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் நகரத்து இளைஞனாகவும் சரி,  நாட்டை காப்பாற்ற போராடும் ராணுவ வீரனாகவும் சரி,  எதற்கும் சளிக்காமல் தன்னை கனக்கச்சிதமாக பொறுத்திக் கொண்டதே,  பெண்களை அவர்களது, சகோதரனாகவும்,  மகனாகவும்,  மனதிற்குப் பிடித்தவாரகவும் மாற்றியது. அந்த யுக்தியே ஒரு வீட்டின் வயதானவர் முதல் சிறுசு, பொடிசுகள் வரை அத்தனை பேரையும் கைப்பிடித்து விஜயகாந்தின் படங்களுக்கு கூட்டிச்சென்றது.

அந்த செல்வாக்கே 2011 சட்டமன்றத் தேர்தலில் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்த்தியதற்கு ஓர் காரணமாக அமைந்தது.

Tags :
Advertisement