ஜெயலலிதா மீன்வள பல்கலை.யில் அட்மிஷன் தொடக்கம்!
நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்
பல்கலைக்கழகத்தில் 2025-26 ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் வரும் 02.06.2025 காலை 10:00 மணி முதல் தொடங்க உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். நா.பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 1 இணைப்புத் தனியார் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சார்ந்த 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் 3
தொழில்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் 398 மாணவர்கள் உறுப்பு கல்லூரி மூலமாகவும், 55 மாணவர்கள் தனியார் இணைப்புக் கல்லூரி மூலமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாணவர்கள் www.admission.tnjfu.ac.in என்ற இணையதளம் மூலம் 27.06.2025 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு பி.எப்.எஸ்சி தூத்துக்குடி, பொன்னேரி
மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில் நுட்பக்கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தின் சென்னை-வாணியன்சாவடியில் உள்ள மீன்வள உயிர்தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 3 வருட இளநிலை தொழில்சார் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் சென்னை அடுத்த மாதவரம், முட்டுக்காடு, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் சிறப்பு ஓதுக்கீடாக அரசு வழிகாட்டுதலின்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக ஒதுக்கீடு 18 இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 4 இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 4 இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிப்பவர்களுக்கு 7 இடங்களும், மீனவர் சமூகத்தினருக்கு 25 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும், காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், சுயநிதி வழி மீன்வளப் பட்டப்படிப்பிற்கு (பி.எப்.எஸ்.சி) 20 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 9 இடங்களும், நிரப்பப்பட உள்ளன. மீனவ சமுதாயப் பிரிவில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர். நா. பெலிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.