ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு... வருத்தம் தெரிவித்தாரா விஜய் ? - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
மதுரையில் இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ‘துரோக அதிமுக’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் அல்ல, திமுகதான் இந்த நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி அதிமுக சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கியது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அப்படி மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
திமுக சுமார் 16 ஆண்டுகள், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் ஏன் இந்த கல்விக் கொள்கையில் கவனம் செலுத்தவில்லை?. மத்திய பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் திமுகவின் வாடிக்கை” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மதுரையில் கால்வாயை பேனர் வைத்து மறைத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “மோசமான ஆட்சி என்பதற்கு இதுவே சான்று. சாக்கடை துர்நாற்றம் தாங்க முடியாமல் திரை போட்டு மறைக்கிறார்கள். அப்படி ஒரு அவல ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது” என திமுகவை சாடினார்.
ஆதவ் அர்ஜுனா விமர்சனம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அவரே ட்வீட் போட்டுவிட்டார். அத்தோடு முடிந்துவிட்டது. விஜய் என்னை தொலைபேசியில் எல்லாம் தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்தார். தேமுதிக கூட்டணி தொடர்பாக ஜனவரியில் தான் அறிவிப்போம் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, தேமுதிகவுடன் சுமூகமான உறவு இருக்கிறது. எப்படியாவது எதையாவது பேசி கூட்டணியை உடைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். ஒருபோதும் அது நடக்காது என செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.