போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது - ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருபவர் நடிகர் ஸ்ரீ காந்த். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். கடைசியாக இவருக்கு விஜயின் நண்பன் படம் கம்பேக்காக அமைந்தது. அதன் பிறகு இவரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை.
இதனிடையே பார் தகராறில் கைதான பிரதீபன் என்பவர் போலீசாரிடம், ஸ்ரீகாந்த் நாற்பது முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்படி நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து போலீசார் பல மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டர்.
அதன் முடிவில் நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கியது செல்போன் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் 'கொகைன்' போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகாந்தை முதல் வகுப்பு சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.