மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் நவாசுதீன் சித்திக்!
தனது கணவருடன் மீண்டும் திருமண வாழ்க்கையை தொடர இருப்பதாகவும், தங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர், பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் ஆலியா என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து ஆலியா, நவாசுதீனிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 4 வருடமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 14 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஆலியா.
இந்தப் பதிவில் நவாசுதீனை ‘ஒன் அண்ட் ஒன்லி லவ்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தனது கணவருடன் மீண்டும் திருமண வாழ்க்கையை தொடர இருப்பதாகவும், தங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஆலியா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "மூன்றாம் நபர் ஒருவரால் தான் எங்களுக்கு இடையில் பிரச்னைகள் வந்தன. இப்போது அந்த நபர் இல்லை. எங்களது குழந்தைகளுக்காக நாங்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய கெட்ட நினைவுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் நிறைய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக் கொண்டு திருமண வாழ்க்கையை தொடர முடிவு செய்திருக்கிறோம்” என்று ஆலியா கூறியுள்ளார்.