போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது... சிக்கியது எப்படி?
பார் தகராறில் கைதான பிரதீபன் என்பவர் போலீசாரிடம், ஸ்ரீகாந்த் நாற்பது முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து போலீசார் பல மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கியது செல்போன் மூலம் அம்பலமானது. மேலும், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
இதனிடையே, போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்டது. கடந்த 2 நாட்களாக போலீசார் தேடி வந்த சூழலில், தனிப்படை போலீசார் கேரளாவில் வைத்து நேற்று ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்தனர்.
அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நடிகர் கிருஷ்ணா போதை பொருளை பயன்படுத்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இருப்பினும் இரண்டு நாள் விசாரணைக்குப்பிறகு நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர் கெவின் என்பவருடன் நடத்திய whatsapp உரையாடல் மூலம் கிருஷ்ணா சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கெவின் நடிகர் கிருஷ்ணாவிற்கு போதைப்பொருள் சப்ளை செய்தது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.