“கட்சி அமைப்பு விதிகளின்படி முழு அதிகாரம் ராமதாஸுக்கே உள்ளது” - பேராசிரியர் தீரன் பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாமக அரசியல் குழு தலைவர் பேராசிரியர் தீரன்:
“பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மன்சூர் ஏற்கனவே இரண்டு முறை
பொருளாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். கட்சி விதிகளின்படி சிறுபான்மையினருக்கு தான் பொருளாளர் பதவி ஒதுக்கப்பட வேண்டும். 2026 தேர்தலில் கட்சியை வெற்றியை நோக்கி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அனைத்தும் கொஞ்ச காலத்தில் சரியாகிவிடும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் நியமிக்கும் பொறுப்பாளர்கள் செல்லாது என அன்புமணி கூறுவது தொடர்பான கேள்விக்கு, அப்படி சொல்ல முடியாது. பாமக அமைப்பு விதிகளை வகுத்தவர்களில் நானும் ஒருவன். அந்த அமைப்பு விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் நடத்தப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என சொல்ல முடியாது. கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருப்பவர்களும் நிறுவனரின் தலைமையின் கீழ்தான் செயல்பட வேண்டும்.
எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா அதிகாரங்களும்
மருத்துவர் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. யார் கட்சியில் சரியாக செயல்படவில்லையோ அவர் மட்டுமே நீக்கப்படுகிறார். எல்லோரையும் மாற்ற வேண்டும் என்பது ராமதாசின் நோக்கம் அல்ல. அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் கூட தற்போது ராமதாஸை பார்க்க வந்துள்ளார்
தனக்கு தனி அணி அமைந்துவிட்டது என கூறுவது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து. மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் இரு கண்கள் போன்றவர்கள். ஊடகத்தினரால்தான் இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்படுகிறது. இது எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. செயல் தலைவர் என சொல்வதற்கு காரணம் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான்.
இப்போதும் எல்லோரும் தலைவர் அன்புமணி என்று தான் சொல்கிறார்கள். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் செயல் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.