அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை - மேற்கு வங்க தரப்பு வாதம்!
உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு, இன்று ஆறாவது நாளாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் காலையிலிருந்து நடைபெற்று வந்த வழக்கு பிற்பகலிலும் தொடர்ந்தது.
அப்போது தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர், அரசியல்சாசன 142வது பிரிவு படி உச்சநீதிமன்றம் தனது சிறப்பு தனி அதிகாரத்தை பயன்படுத்த முடியும். ஆளுநருக்கு மூன்று மாதம் கால அவகாசம் நிர்ணயித்தது மூலம் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனித்தனியாக மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுக காலதாமதம் ஏற்படும். எனவே பொதுவான கால நிர்ணயம் தேவையான ஒன்று என்று வாதிட்டனர்.
தமிழ்நாடு வாதம் முடிந்ததை தொடர்ந்துமேற்கு வங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது அவர்,
அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201 ஆகியவை தனித்து இயங்குமா என்பதுதான் கேள்வி. அரசியல் சாசன பிரிவு 200 என்பது ஆளுநர் முடிவெடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது தன்னிச்சையானதா ? அல்லது அமைச்சரவை குழுவின் ஆலோசனையின் படியா ? என்பதுதான். அதேபோல் தான் குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 201 என்பதும். இந்த கேள்வி தான் நீதிமன்றத்தின் முன்பு உள்ளது. ஆளுநர் சட்டமன்றத்தின் விருப்பத்தை மீறி செயல்படுவது என்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயல். மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த விருப்புரிமையும் இல்லை.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் செயல் என்பது , அவர் விருப்புரிமையையும் பயன்படுத்துகிறார் என்று தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கபில் சிபல், ஆளுநரின் விருப்புரிமை என்றால் என்ன என்பது தொடர்பாக ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஒப்புதல் வழங்க முடியாது என்று நாட்கணக்கில் கையில் வைத்திருக்க முடியாது. பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் என்று எதுவும் இல்லை. தனி அதிகாரம், விருப்புரிமை என்பது அரசியல் சாசன பிரிவு 200 க்கு புறம்பான ஒரு கருத்து. ஒரு மசோதா சட்டமன்றத்தால் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். மாறாக அதனை குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்ப முடியாது. அரசியல் சாசனம் வழங்காத ஒரு விஷயத்தை ஆளுநர் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு மீதான விசாரணையை நாளை தினத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.