தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்து - சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அடுத்த தாம்பரம் மேம்பாலம் கீழ் சாலையை கடப்பதற்காக மேற்கு தாம்பரம், புலிகொரடு பகுதியை சேர்ந்த சூர்யா(23), என்பவர் காத்திருந்த போது நேற்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மேம்பாலத்தின் மீது இருந்து மின் விளக்கு கம்பம் ஒன்று முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாலையை கடக்க காத்திருந்த நபர் மீது விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில் கடந்த 2 வாரங்களாக தாம்பரம் பகுதியில் நண்பருடன் தங்கி தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும், உணவு டெலிவரி செய்ய சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக பாராமரிப்பின்றி மின் கம்பம் சாய்ந்து விழுந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அத்துடன் மேம்பாலத்தின் மீது இருக்கும் மின் விளக்கு கம்பங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.