"தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்" - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
நாடு முழுவதும் ரயில்களில் பொய்யானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல், பண்டிகை காலம், விசேஷ நாட்களில் ரயில்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரயில்வே துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தட்கல் முன்பதிவு தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் எனப்படும் சரிபார்ப்பு செய்து வைத்து இருக்கும் நபர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி என்ணை பதிவு செய்த பின் டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. நடப்பு மாத இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.