For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ. 6,64,180 கோடி முதலீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

05:31 PM Jan 08, 2024 IST | Web Editor
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ  6 64 180 கோடி முதலீடு   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் பெருமிதமாக தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 30000 மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்தனர்.

அதில் 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றனர். நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்று 2ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்தனர்.

மாநாட்டின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாடு நிறைவு விழாவில் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“உலகமே வியக்கும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா. உலக அரங்கில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக இருக்கும்.  இந்த மாநாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மூலமாக, முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகளை திறந்துவைத்துள்ளேன். 40 ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. இதனை இந்தியாவே உற்றுநோக்கும் அவையில் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலை வாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என, மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement