துர்நாற்றத்துடன் கிடந்த சூட்கேஸ்... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் ராவின் மாவட்டத்தில் உள்ள துர்ஷெட் கிராமம் அருகே மும்பை - கோவா நெடுஞ்சாலையில் சாலையோர பள்ளத்தில் நேற்று (மார்ச் 10) கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீச, அதனை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில், பெண்ணின் உடல் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கான அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
உயிரிழந்த பெண் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும், இருப்பினும் உடற்கூராய்வு முடிவுகள் வந்தபிறகே சரியான வயதும், இறப்புக்கான காரணமும் தெரியவரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்துள்ளனர்.
சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இது போன்ற சம்பவம் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.