வீட்டில் நேர்ந்த திடீர் வெடி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
ஹரியானா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேற்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4 பேர் உயிரிழந்த நிலையிலும், ஒருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்தவரை உடினடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர். ஆனால் வெடி விபத்து படுக்கை அறையில் நிகழ்ந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “இந்த விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டது அல்ல, படுக்கையறையில் நடந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீக்கறையாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்றனர்.
வெடி விபத்துக்கான காரணத்தை அறிய, வெடிகுண்டு நிபுணர்களையும் தடவியல் ஆய்வகத்தின் குழுவையும் காவல் துறையினர் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.