முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றமாக, நாளை டெல்லியில் இருந்து நேரடியாக அவர் சென்னை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உதவிகோர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே நேற்று இரவு டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேரடியாக தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முதலமைச்சரின் பயணத்தில் திடீர் மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் டெல்லியில் இருந்து நேரடியாக நாளை காலை சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை முடித்த பின்னர் நாளை மாலை விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.