ரூ.5 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திர நகலை கோபத்தில் உண்டியலில் போட்ட நபர் - சொத்துரிமை கோரி கோயிலில் காத்து கிடக்கும் குடும்பம்!
திருவண்ணாமலை மாவட்ட அம்மன் ஆலயங்களில் முதன்மை ஆலயமாக
விளங்கி வருவது படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம். இந்த
கோயில் அருகே வசித்து வரும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் விஜயன்
என்பவர், கடந்த மே மாதம் 8 ஆம் தேதி ரூ 5 கோடி மதிப்புள்ள தனது வீட்டின்
சொத்து நகல்களை அந்த கோயில் உண்டியலில் போட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று(ஜூன்.24) அந்த ஆலயத்தில் இந்து சமய அறநிலைத்துறை
உதவி ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலும் கோவில் ஆணையாளர்
சிலம்பரசன் முன்னிலையிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஏற்பாடு
செய்யப்பட்டது. இதையறிந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கஸ்தூரி
மற்றும் மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் தங்களுக்கு தெரியாமல்
அவர் கோயில் உண்டியலில் சொத்து பத்திரங்களை போட்டதாக கூறி
வாரிசுதாரர்களாகிய எங்களுக்கும் சொத்து வேண்டும் என்று அருள் துறை
அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனால் உண்டியல் எண்ணும் பணி இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. பின்னர் அந்த குடும்பத்தினர் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த ஆலய செயல் அலுவலர் சிலம்பரசன், அதிகாரிகளின் ஆலோசனைப்படி வீடியோ ஆதாரத்துடன் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் பணியை தொடங்கினார்.
அப்போது முன்னாள் ராணுவ வீரர் விஜயன் உண்டியலில் போட்ட பத்திர நகரங்கள்
உண்டியலில் இருந்ததால் அவற்றை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பத்திரமாக எடுத்து வைத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன் குடும்பத்தினர் மீதுள்ள கோபம் காரணமாக அப்படி செய்ததாக கூறியுள்ளார். அவரின் இந்த செயலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். இச்சம்பவம் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்திற்கு வரும்
பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்ததாக அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்று பக்தர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.