“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” - கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நெடுஞ்சாலையோரங்களிலும் தவெகவின் பேனர்கள் வைக்கக் கூடாது அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின்படி, கட்சி சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன். மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கட்சி நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ. விளம்பரப் பதாகைகளோ கட்சி சார்பில் வைக்கப்படவில்லை.
விஜயும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே அவரின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர். கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கட்சி சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கட்சி வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கேட்டுகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.