“வரும் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது” - தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி!
தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்த தகவலைப் பகிர்ந்தார்.
அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் பெய்த கோடை மழையின் அளவு இயல்பை விட 90 % அதிகம். மத்திய மேற்கு மற்றும் அதற்கு ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல பகுதி நிலவுகிறது. வரும் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்று(மே.19) காலை 8:30 மணிவரை பெய்த மழையின் அளவு அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி 14 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
வட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றிலிருந்து நாளை காலை 8 மணி வரை சேலம் நாமக்கல் வேலூர் ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி 27ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு சில நாட்களில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும்” இவ்வாறு அவர் கூறினார்.