மனைவியுடன் ஏற்பட்ட தகராறு... கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வாத்தலை தோப்புத் தெருவில்
வசித்து வந்தவர் சங்கர் (வயது 35). இவர் கட்டிடத் தொழில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (வயது 30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சங்கர் மனஅழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சங்கர் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள மேற்கூரையில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ரேவதி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும், உயிரிழந்த சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.