மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு!
18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த முறை மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2019 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது. நாடு முழுவதும் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பெண் எம்.பி.க்களில் 11 பெண்களுடன் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பாஜக அதிகபட்சமாக 69 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 41 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்முறை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் 30 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸின் 14, திரிணாமுல் காங்கிரஸின் 11, சமாஜ்வாடியின் 4, திமுகவின் 3, ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் எல்ஜேபியின் தலா ஒரு பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
17வது மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 78 ஆக இருந்தது, இது மொத்த எண்ணிக்கையில் 14 சதவீதமாகும். 16வது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்களும், 15வது மக்களவையில் இந்த எண்ணிக்கை 52 ஆகவும் இருந்தது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஹேமா மாலினி, திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா, என்சிபி (சரத்சந்திர பவார்) சுப்ரியா சுலே மற்றும் சமாஜ்வாடி கட்சியின் டிம்பிள் யாதவ் ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர், அதே நேரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் மிசா பார்தி போன்ற வேட்பாளர்கள் தங்கள் வெற்றியின் மூலம் கவனத்தை ஈர்த்தனர். சமாஜ்வாடி கட்சியின் 25 வயதான மச்சிலிஷாஹர் வேட்பாளர் பிரியா சரோஜ் மற்றும் கைரானா தொகுதியில் இருந்து 29 வயதான இக்ரா சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர்களில் அடங்குவர்.