தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!
தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, 27 ஆம் தேதியுடன் நிடைவடைந்தது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள கடநாடு கிராமத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல். முருகன் உரிய அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.