’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ - தமிழ்நாடு அரசு
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தற்போது வரை 92 சதவிகிதம் வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு தற்போது வரை 92 சதவிகிதம் பேருக்கு நிவாரண நிதியானது வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் புயல், மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 5.67 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.