திமுகவில் உயரும் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கை!
திராவிட முன்னேற்ற கழகத்தில், கனிமொழி எம்.பி, அமைச்சர் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி, ஆ.ராசா எம்.பி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோ துணைப் பொதுச் செயலாளராக உள்ளனர். ஏற்கெனவே 5 பேர் பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் நிலையில், கூடுதலாக திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி திமுகவில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பு வருகிற ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுக்குழு கூட்டதிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவில் உள்ள முக்கிய பொறுப்புகளில் சில மாற்றங்கள் வர உள்ளது.
வயது மூப்பால் சரிவர கட்சி பணி செய்ய முடியாதவர்கள், கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உழைக்காதவர்களுக்கு சில எச்சரிக்கையை பொதுக்குழு அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுக்கவுள்ளார் என்ற தகவல்கள் நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.