முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடை மாதிரி வீடுகளை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், இன்று(ஜூன்.22) கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கப்பட்டது.
மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு...
1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.
3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
4) தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.