கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு... மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (38). இவரது மகன் இஷாந்த் (5). சிறுவன் இஷாந்த் சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் சிறுவனின் பெற்றோர் இஷாந்த்தை தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், இஷாந்த் தனது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் மிக அருகே சென்ற மின் கம்பிகள் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது உரசியது. இதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயிப்பேட்டை கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. அதனை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப்படுத்தியதால்தான் சிறுவன் உயிரிழந்ததாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். ஏற்கனவே இதே கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உரசியதால் வைக்கோல் போர் எரிந்தது குறிப்பிடத்தக்கது.