For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி - ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

02:46 PM May 06, 2024 IST | Web Editor
கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி   ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்
Advertisement

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சர்வ தர்ஷித் மற்றும் அவருடன் பணியாற்றி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் ஷாம், வெங்கடேஷ், சாருகவி, காயத்ரி, நேசி ஆகிய 6 பேரும் நாகர்கோவில் வந்தனர்.

இவர்கள் 6 பேரும் இன்று (மே 6) காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர். அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்ததால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரம் லெமூர் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது ராட்சத அலை அவர்கள் 6 பேரையும் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

பறக்கையைச் சேர்ந்த சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய 2பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்களது சடலம் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்வதர்ஷித் சிகிச்சை பலனின்றி பலியானார். நேசி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சுற்றுலா வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் எவ்வித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவது ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை எனப்படுகிறது. ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் இதுவரை கன்னியாகுமரியில் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

Tags :
Advertisement