For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு - ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை!

01:12 PM Mar 03, 2024 IST | Web Editor
பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு   ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“பிரதமர் நரேந்திர மோடி நாளை (04.03.2024) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பேரில், பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம். YMCA மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குவி.மு.ச. பிரிவு 144ன் கீழ் சென்னை பெருநகரில் 01.03.2024 மற்றும் 29.04.2024 வரை டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement