இந்த வாரம் வெளியான 5 படங்கள்... எந்த படம் அருமை, எது சுமார்?
தமிழில் இந்த வாரம் மார்கன், லவ்மேரேஜ், குட்டே, திருக்குறள், கண்ணப்பா ஆகிய 5 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் குறித்த மினி திரைவிமர்சனம் இதோ
லவ்மேரேஜ்
சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, சுஷ்மிதா பட், அருள்தாஸ், மீனாட்சி தினேஷ், ரமேஷ்திலக், முருகானந்தம், கோடங்கி வேல்முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்திருக்கும் குடும்ப படம் லவ் மேரேஜ். 30வயதை தாண்டிய விக்ரம்பிரபுக்கு பெண் கிடைக்காத காரணத்தால் தேனியில் இருந்து கோபி செட்டிபாளையத்தில் இருக்கும் சுஷ்மிதா பட்டை பெண் பார்க்க குடும்பமே பஸ்சில் கிளம்புகிறது. அந்த சமயத்தில் லாக டவுண் அறிவிக்கப்பட, பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை வீட்டார் தங்க, அப்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கதை.
தமிழ்சினிமாவில் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட, உறவுகள் சம்பந்தப்பட்ட உணர்வு பூர்வமான கதையை காமெடி, கலாட்டா கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர். அதை கல்யாண பின்னணியில் கொடுத்து இருப்பதுதான் சிறப்பு. விக்ரம்பிரபுவின் பெண் பார்க்கும் சீன்கள், அதில் நடக்கும் காமெடிகள், பின்னர் ஏற்படும் சிக்கல், உறவினர்கள் பந்தா என முதற்பாதி ஒரு மாதிரியாகவும், பிற்பாதி வேறு மாதிரியாகவும் செல்கிறது.
ஹீரோயினாக வரும் சுஷ்மிதா, அவர் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ் நடிப்பு நச். இவர்களை தவிர, முருகானந்தம், ரமேஷ்திலக், கோடாங்கி மற்றும் பலர் தங்கள் பங்கிற்கு காமெடி பண்ணுகிறார்கள். நம் குடும்பங்களில் நடந்த கல்யாண கலாட்டா, பெண் பார்க்கும் படல நினைவுகள் லவ் மேரேஜ் பார்த்தால் கண்டிப்பாக நினைவுக்கு வரும். ஷான் ரோல்டன் இசை, உறவினர்களில் பலரின் நடிப்பு, அந்த கேரக்டர் பின்னணி படத்துக்கு பலம். முதற்பாதியில் இருந்த வேகம், விறுவிறுப்பை, பிற்பாதியில் காண்பித்து இருந்தால் படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும். ஆனாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
மார்கன்
லியோஜான்பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீஷண், பிரிகிடா உட்பட பலர் நடித்த கிரைம் திரில்லர் படம் மார்கன். ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அது குறித்து விசாரிக்க மும்பையில் இருந்து வருகிறார் போலீஸ் ஆபிசரான விஜய் ஆண்டனி. அவர் சப் இன்ஸ்பெக்டர் பிரிகிடாவுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். அப்போது நீச்சல் வீரரான அஜய் மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. அந்த கொலையை அவர் செய்தாரா? கொலைகான காரணம் என்ன? விஜய் ஆண்டனிக்கும் இந்த வகை கொலைக்குமான சம்பந்தம் என்ன என்பதுதான் மார்கன் கதை.
ஆரம்பத்தில் வித்தியாசமாக தொடங்கும் திரைக்கதை, பிற்பாதியில் சற்றே போராடிப்பது மைனஸ். விஜய் ஆண்டனி நடிப்பும், அவர் துப்பறியும் விதமும் ஓகே. புதுமுகம் அஜய் தீஷன் சம்பந்தப்பட்ட பேன்டசி காட்சிகள் புதுமை. கடைசியில் வரும் ஒரு பெண் கேரக்டர் படத்துக்கு பலம். கொலை வழக்கில் துப்பறியும் சீன்கள், திருப்பங்கள், சித்தர் சம்பந்தப்பட்ட காட்சிகள், கடைசி அரை மணி நேர கிளைமாக்ஸ் படத்துக்கு பலம். ஆனால், ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது ஒரு திரில்லர் கதைக்காக விறுவிறு குறைவாக இருப்பதும், அந்த பேன்டசி காட்சியின் நம்பக தன்மையும் மார்கனின் வேகத்துக்கு தடை போடுகிறது. மாறுபட்ட கதையை விரும்புவர்கள் சற்று பொறுமையாக பார்க்கலாம்.
குட் டே
திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கும் கதைநாயகன் பிரித்விராஜ் ராமலிங்கத்துக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, பணத்தட்டுப்பாடு காரணமாக குடும்பத்தில் அதை விட பல பிரச்னைகள், வேலை நிமித்தம் குடியிருக்கும் இடத்திலும் வீட்டு ஓனருடன் பிரச்னை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தால் சராசரி தமிழன் செல்லும் இடம் டாஸ்மாக்தானே. ஏற்கனவே போதையில் இருப்பவர், இன்னும் கொஞ்சம் சரக்கு போட, அவர் செய்யும் அலம்பல்கள், வம்புகள், கிண்டல் பேச்சுகள்தான் குட் டே படம். ஒரே நாளில் இந்த கதை நடக்கிறது. இப்படத்தை என். அரவிந்தன் இயக்கியிருக்கிறார்.
ஒரு குடிகாரனின் ஒரு நாள் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பது கதையாக இருந்தாலும், அதை சீரியசாக, சோகமாக சொல்லாமல் ஜாலியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். நாம் நேரில் பார்த்து ரசித்த பல குடிகாரர்களை, அவர்களை சேட்டைகளை நினைவு படுத்துகிறார் ஹீரோ பிரித்விராஜ் ராமலிங்கம். அவரின் பேச்சும், அவரின் செயல்பாடுகள், பாடிலாங்குவேஜ் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. .
ஹீரோ தவிர, அவர் முன்னாள் காதலியாக வரும் மைனா, நண்பனாக வரும் பக்ஸ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆர்ட் டைரக்டர் விஜய்முருகன், முக்கியமான கேரக்டரில் வரும் போஸ் வெங்கட், வேல.ராமமூர்த்தியும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இன்னொரு போலீசாக வரும் திருநங்கை ஜீவாவுக்கும் நல்லதொரு அழுத்தமான வேடம். காளி வெங்கட் சில சீன்களில் வந்தாலும் அமர்களம் செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையும் பாடலும் பலமாக இருக்கிறது.
வழக்கமான ஹீரோ, பில்டப், ஹீரோயின் ,காதல், வில்லன், சினிமாத்தனம் இல்லாமல், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை சொல்லிவிட்டு, அவனை குடிக்க வைக்கும் காரணங்கள், குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை, அதை தவிர்ப்பதால் உண்டாகும் நன்மைகளை சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
திருக்குறள்
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை காமராஜ் என்ற பெயரில் படமெடுத்த ஏ.ஜே.பாலகிருஷ்ணன் திருவள்ளுவர் வாழ்க்கையை சொல்லும் விதமாக திருக்குறள் படத்தை கொடுத்துள்ளார். கலைச்சோழன் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் வருகிறார்கள். திருவள்ளுவரின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு சிலரின் காதல், இரண்டு மன்னர்களுக்கு இடையே போர், அதில் திருவள்ளுவர் தம்பதிகளின் பங்கு என மாறுபட்ட பார்வையில் கதையை கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர். பல சீன்களில் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, கலைச்சோழன், வாசுகி நடிப்பு அருமையாக உள்ளது.
வழக்கமான தமிழ் சினிமா மாதிரி இல்லாமல், திருக்குறள் உருவான விதம், அந்த கால மனிதர்களின் மனநிலை, மன்னர்களின் குணம், மக்களின் நிலை என பல விஷயங்களை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இளையராஜா இசை படத்தை உயர்த்துகிறது. திருவள்ளுவர் வரலாற்றை, அந்த தமிழ் சமூகத்தை அறிய விரும்புகிறவர்கள் திருக்குறளை பார்க்கலாம்.
கண்ணப்பா
சிவன் மீதான பக்தியால் தனது இரண்டு கண்களை கொடுத்து கண்ணப்ப நாயனாராக உயர்ந்த திண்ணன் என்ற வேடனின் கதைதான் கண்ணப்பா. விஷ்ணுமஞ்சு திண்ணனாக வருகிறார். அவர் காதலியாக ப்ரீத்திமுகுந்தன் வருகிறார். பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், பிரமானந்தம், மதுபாலா, மோகன்பாபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றன. சிவனாக அக்ஷய்குமார், பார்வதியாக காஜல்அகர்வால் நடித்து இருக்கிறார்கள். படத்தின் தொடக்கம், காட்சிகள், பிரமாண்டத்தை பார்க்கும்போது இது பக்தி படமா? பக்கா கமர்ஷியல் படமா என்ற சந்தேகம் வருகிறது.
அந்த அளவுக்கு பெரும்பாலான காட்சிகளை ரசித்து, அழகாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் முகேஷ்குமார் சிங். குறிப்பாக, விஷ்ணுமஞ்சு, ப்ரீத்திமுகுந்தன் காதல் காட்சிகள், பாடல்கள் காட்சிகள் அவ்வளவு அழகு. அதேசமயம், சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. ஒரு கட்டத்தில் இது பக்தி படமா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. அப்படியொரு திரைக்கதை. ஆனால், கடைசி அரை மணி நேரம் தி்ண்ணன் எப்படி கண்ணப்பராக மாறினார் என்ற காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
சிவன் மீது அவர் கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் காட்சிகள் மிரட்டல். இனக்குழுக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், அழுத்தமான வசனங்கள், புராண சம்பவங்கள் ரசிக்க வைக்கிறது. நியூலிலாந்து காட்டு பகுதியில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கேமரா வொர்க், கிராபிக்ஸ் வொர்க், ஸ்டீவன் மியூசிக் வொர்க் பிரமாதம். ஒரு பக்தி கதையை பக்கா கமர்ஷியலாக, அழகியலாக காண்பித்தது புதுமை. கடவுள் பக்தியை, சிவன் மகிமையை, ஒரு முரட்டு பக்தனின் கதையை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது கண்ணப்பா. காளகஸ்தி என்ற ஸ்தலம் உருவான வரலாறு மனதில் நிற்கிறது.
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்