மதுரையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65). இவரது பேரன் வீரமணி (வயது 10) மற்றும் பக்கத்துவீட்டு பெண் வெங்கட்டி (வயது55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் வீடு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வலையன் குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கட்டி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த வெங்கட்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை, சிறுவன் வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வலையங்குளம் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.