2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது வரை சுமார், 7 முறை இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டு கொரோனோ பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.
இதனிடையே இந்தியாவில் 2027ம் ஆண்டு கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள்ளிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2027 மக்கள் தொகை கணக்கெடுப்பானது "முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு" என்றார். மேலும் பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும், முதல் கட்டமான வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதம் நடைபெறும் . மேலும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும்" என்று கூறினார்.