திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த சூழலில், 4 தொழிலாளர்கள் சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்போது அவர்களை திடீரென விஷவாயு தாக்கியது. இதில் அவர்கள் 4 பேரும் மயக்கம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சுண்டமேட்டைச் சேர்ந்த ஹரி, சின்னசாமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல்லடம் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான நவீன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.