ஒரே இரவில் நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியை உலுக்கிய சம்பவம் - வெளியான அதிர்ச்சி பின்னணி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று (ஜுன் 1) இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) என்பவர் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரகதீஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த அரைமணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி எனபவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கஸ்தூரியையும், அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலையின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் சென்பகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் சதீஷ் மாதவன் (21). இவர் ரேஷன் அரிசியை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து வள்ளுவர் நகர் சலவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் தினமும் மது அருந்தி வந்தார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த ரத்தினம், ஆனந்தன் மற்றும் அவரது மகன் பிரகதீஸ்வரன் ஆகியோர் கண்டித்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறும் கைகலப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக ரத்தினம் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலையத்தில் சதீஷ் மாதவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து, சமீபத்தில் வள்ளுவர் நகர் பகுதியில் நடைபெற்ற திருமண
நிகழ்ச்சியொன்றில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது சதீஷ் மாதவன் உள்ளிட்ட சிலர் அந்த
பேனரை கிழித்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவ்வழியாக பைக்கில் வந்த சதீஷ் மாதவனை, ஆனந்தனும் அவரது மகன் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட சிலரும்
எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மாதவன் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது தொடர்பாக ஆனந்தன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சதீஷ் மாதவன் தனது நண்பர்கள் 5 பேருடன் மது அருந்தி விட்டு வெளியே வந்தார். அங்கு டாஸ்மாக் கடை வாசலில் பிரகதீஸ்வரனை பார்த்ததும் சதீஷ் மாதவனும் அவனது கூட்டாளிகளும் மறைத்து
வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
பிரகதீஸ்வரனின் உடலைகைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற 30 நிமிடங்களில் பிரகதீஸ்வரனின் ஆதரவு கோஷ்டியினர், புதுக்கிராமம் சென்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவனின் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் சதீஷ் மாதவனின் அம்மா கஸ்தூரியை வீட்டு வாசலில் வைத்து வெட்டிவிட்டு தப்பியோடினர்.
கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த கஸ்தூரியின் உறவினர்
செண்பகராஜ் என்பவரின் கையையும் அக்கும்பல் வெட்டியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை
கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த செண்பக ராஜை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதன்மூலம், முன் விரோதம் காரணமாக ஒரு கொலையும், பழிக்கு பழியாக 30 நிமிடத்தில் மற்றொரு கொலையும் நடந்தது தெரியவந்தது. 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.