Weather Update | ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“வடமேற்கு வங்காள விரிகுடா, தென்மேற்கு வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்காளத்தின் மீது இன்று, காலை 05.30 மணியளவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதேபோல், இன்று காலை 05.30 மணியளவில் குஜராத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : “திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல் தென்மேற்கு வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்காளத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களாக இருக்கக்கூடிய நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்தினுடைய மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதி கன மழை பதிவான நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் மழை சற்று குறையும்"
இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.