குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு...!
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற ஏரி உள்ளது. விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 23 பேரும் 4 ஆசிரியர்களும் சுற்றுலா சென்றனர். அப்போது, இவர்கள் அனைவரும் இந்த ஆற்றில் சவாரி செய்துள்ளனர். படகு சவாரி சென்றபோது எதிர்பாரத விதமாக ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள் : அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நயன்தாரா..!
![](https://news7tamil.live/wp-content/uploads/2024/01/postcard-64-3-1024x576.webp)
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ஹார்னி ஏரியில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் வேதனையை தருகிறது. இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத்தில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பல மாணவர்கள் மாயமாகியுள்ளனர். குஜராத் அரசு நிர்வாகம் மீட்பு பணிகளை விரைந்து செய்து, மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.