மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு ... மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி - சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!
சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நேற்று மதுரையில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை மழை நீர் வடிகாலை மறுசீரமைக்கும் வேலை அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டமிடல் மற்றும் கண்காணிப்புடன் கூடிய பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான நல்ல விளைவுகளும் உருவாக்கியுள்ளது.
ஆனால் மதுரையில் அப்படிச் சொல்வதற்கில்லை. நீர் போக்கு வழித்தடங்களை கண்டறிந்து அவற்றின் இடையூறுகளை சரி செய்து, நிலத்துக்கடியில் குழாய் பதித்து, லிப்ட் ஸ்டேஷன்கள் உருவாக்கி மழைநீரை கையாளத் திறன்கொண்ட நகரமைப்பை உருவாக்க வேண்டும். மதுரைக்கு வரும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை நபர் சார்ந்து இருப்பதைவிட நகரம் சார்ந்து இருக்க வேண்டும்.
எல்லாத் துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது. அடுத்துத் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.