125 வயதில் உயிரிழந்த பிரபல சாணக்யா ஆமை... சோகத்தில் உயிரியல் பூங்கா ஊழியர்கள்...
நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த கலப்பாகஸ் வகை ஆமை (125 வயது) உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது.
ஆமைகள் மிக நீண்ட காலம் வாழும் உயிரினங்களாக கருதப்படுகிறது. சராசரியாக, 200 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரையிலும் ஆமைகள் வாழும். அந்த வகையில் கலப்பாகஸ் வகை ஆமைகள் சராசரியாக 175 முதல் 225 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை. இந்நிலையில், கலப்பாகஸ் வகை ஆமை ஒன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் வயது 125 என வன உயிரின மருத்துவர்கள் கணித்திருந்தனர்.
இதையும் படியுங்கள் : பாஜக கூட்டணியில் பாமக.. தொகுதி பங்கீடு கையெழுத்தானது…
அந்த ஆமைக்கு பூங்கா அதிகாரிகள் சாணக்யா என பெயர் சூட்டி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாணக்கியா ஆமை உணவு உட்கொள்வதை நிறுத்தியாக கூறப்படுகிறது. இதனால், அந்த ஆமையை கால்நடை மருத்துவர்கள் குழுவினர் மற்றும் பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவில் சாணக்யா ஆமை உறக்கத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் மற்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த ஆமைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையில், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்ததால் ஆமை உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர். சாணக்யா ஆமை 125 வயதிலேயே உயிரிழந்து இருப்பது, வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.