கார் மோதி 12 ஆடுகள் பலி... ஒருவர் உயிரிழப்பு: சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி - கோவை நீதிமன்றம் உத்தரவு!
கோவை அருகே விளாங்குறிச்சியைச் சேர்ந்த ரவி, தனது விவசாய நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இவர் கடந்த மே.30ஆம் தேதி காலை விளாங்குறிச்சி சாலை அருகே தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, மழை பெய்துகொண்டிருந்த வேளையில், பெட்ரோல் பங்க் அருகே சாலையோரமாக ஆடுகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்தது. காரின் மோதிய வேகத்தில் 12 ஆடுகள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தன. மேலும், ஆடுகள் கூட்டத்துடன் சென்றுகொண்டிருந்த 2 நாய்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. விபத்தில் படுகாயமடைந்த ரவியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார். இது குறித்து கோவை மாநகர கிழக்கு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டிச் சென்றது 17 வயது சிறுவன் என்பதும், தெரிய வந்தது. ஆடுகள் பலியானதும் பயந்து போன சிறுவன் காரை நிறுத்தாமல் சென்று விட்டது தெரியவந்தது.
இதை அடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டதுடன், ஒரு மாதம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டார். இதை அடுத்து அந்த சிறுவன் கோவை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவனுடைய உறவினர் மற்றும் காரின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தலைமறைவாகினர்.