For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரே ஆண்டில் 1 டன் தங்கம், ரூ.1800 கோடி சேமிப்பு - திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!

07:02 PM Nov 16, 2023 IST | Web Editor
ஒரே ஆண்டில் 1 டன் தங்கம்  ரூ 1800 கோடி சேமிப்பு   திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி
Advertisement

திருப்பதி கோயில் டெபாசிட் கணக்கில், ஒரே ஆண்டில் ஒரு டன் தங்கம் மற்றும் 1800 கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை சேமித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஏராளமான அளவில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் ஆகியவை நடைபெறுவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியது. தெலுங்கு தேசம் கட்சியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், இன்று திருப்பதி மலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் செலுத்தும் பணம், தங்கம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெண்டர் மூலம் வட்டியின் சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே 68 லட்ச ரூபாய் தேவஸ்தானத்தின் பணம் டெபாசிட்டாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அந்த தொகை 17 ஆயிரத்து 816 கோடியே 15 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 1877 கோடியே 47 லட்ச ரூபாயை தேவஸ்தானம் பணமாக சேமித்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளில் தேவஸ்தானத்தின் தங்க டெபாசிட் அளவு 10,258 கிலோ 370 கிராமாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தங்கத்தின் டெபாசிட்டின் அளவு 11,225 கிலோ 660 கிராமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 967 கிலோ 290 கிராம் தங்கத்தை தேவஸ்தான நிர்வாகம் சேமிப்பு செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை வங்கிகளில் 4791 கோடியே 6 லட்சம் ரூபாய் பணமும், 3885 கிலோ 920 கிராம் தங்கமும் வங்கிகளில் தேவஸ்தானத்தின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று அப்போது தெரிவித்தார்.

Tags :
Advertisement