சந்திரபாபு நாயுடுவை திடீரென சந்தித்த ஒய்.எஸ் ஷர்மிளா! ஏன் தெரியுமா?
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தன்னுடைய மகன் திருமணத்திற்கு வர வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் ஷர்மிளா அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் ஷர்மிளா தற்போது
காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். அவருடைய
மகன் ராஜா ரெட்டிக்கு பிரியா என்பவருடன் வரும் 17-ந் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
ராஜா ரெட்டி, பிரியா ஆகிய இரண்டு பேரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில்
பணியாற்றி வருகின்றனர். அங்கு சந்தித்து காதலித்த இரண்டு பேருக்கும், இரு
குடும்பத்தாரும் திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில் சர்மிளா தன்னுடைய சகோதரரும், மாப்பிள்ளையின் தாய்மாமனும் ஆகிய
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திருமணத்துக்கு வர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து விஜயவாடாவில் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.
அரசியல், சாதி ஆகிய இரண்டு விஷயங்களிலும் இரு துருவங்களாக ஆந்திராவில்
நிற்கும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
ஆகிய இரண்டு பிரபலங்களும் ஒரு குடும்பத்தின் சுப நிகழ்ச்சியில் சந்தித்துக்
கொள்வதற்கான சூழல் இந்த திருமண அழைப்பு மூலம் ஏற்பட்டுள்ளது.